தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :
இலக்கணம்:அலகு III: எழுதும் திறன்
நிறுத்தக்குறிகள்:
நிறுத்தக்குறிகள்
நிறுத்தக்குறிகளை நமக்கு அறிமுகம் செய்தவர்கள் = ஐரோப்பியர்கள்
பல்வேறு வகையான நிறுத்தக்குறிகளை நமக்கு அறிமுகப்படுத்தி எவ்வெவ்விடங்களில் அவற்றைப் பயன்படுத்த வேண்டுமென விளக்கியவர்கள் ஐரோப்பியர்களே ஆவர். தமிழ்மொழியின் இலக்கண நெறிகளுக்கு ஏற்ப அவற்றைப் பயன்படுத்திச் சொற்றொடர்களைப் பிரித்துப் பொருளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
நிறுத்தக்குறிகள் பயன்கள்
- நிறுத்தற் குறிகள், வெறும் அடையாளங்கள் அல்ல. அவை பொருள் பொதிந்தவை.
- மக்களது உணர்வின் இயக்கமாக விளங்குவது மொழி.
- மொழியின் தெளிவை உணர்த்த, நிறுத்தல்களும் குறியீடுகளும் அடையாளங்களாகும்.
- நிறுத்தற்குறிகள், ஒரு தொடரிலுள்ள பொருள் வேறுபாட்டை உணர்த்துவதற்கு அடிப்படையாகும்.
- மொழியைத் தெளிவாகப் பேசவும் எழுதவும் நிறுத்தற்குறிகள் துணை நிற்கின்றன.
- நிறுத்தற்குறிகளைப் பயன்படுத்திப் படிக்க முயலும்போது, தெளிவாகப் பொருள் உணர்ந்து, படிப்பவர்களும், கேட்பவர்களும் பயன்பெறுவர்.
நிறுத்தக்குறிகள் வகைகள்
நிறுத்தக்குறிகளில் பல்வேறு வகையான குறிகள் உள்ளன. அவற்றில், சில
- காற்புள்ளி ( , )
- அரைப்புள்ளி ( ; )
- முக்காற்புள்ளி ( : )
- முற்றுப்புள்ளி ( . )
- வினாக்குறி ( ? )
- வியப்புக்குறி ( ! )
- விளிக்குறி ( ! )
- மேற்கோள்குறி
- ஒற்றை மேற்கோள் குறி ( ‘ ‘ )
- இரட்டை மேற்கோள் குறி ( “ “ )
காற்புள்ளி என்றால் என்ன
காற்புள்ளி ( , )
பொருள்களைத் தனித்தனியாகக் குறிப்பிடும் இடங்கள், எச்சச் சொற்றொடர்கள், எடுத்துக்காட்டுகள், இணைப்புச்சொற்கள், திருமுகவிளி, இணைமொழிகள் முதலிய இடங்களில் காற்புள்ளி வருதல் வேண்டும்.
காற்புள்ளி எடுத்துக்காட்டுகள்
அறம், பொருள், இன்பம், வீடு என வாழ்க்கைப்பேறு நான்கு.
நாம் எழுதும்போது, பிழையற எழுத வேண்டும்.
இனியன் நன்கு படித்தான்; அதனால், தேர்ச்சி பெற்றான்.
ஐயா; அம்மையீர்,
சிறியவன் பெரியவன், செல்வன் ஏழை.
அரைப்புள்ளி என்றால் என்ன
அரைப்புள்ளி (;)
தொடர்நிலைத் தொடர்களிலும் ஒரு சொல்லுக்கு வேறுபட்ட பொருள் கூறும் இடங்களிலும் அரைப்புள்ளி வருதல் வேண்டும்.
அரைப்புள்ளி எடுத்துக்காட்டுகள்
வேலன் கடைக்குச் சென்றான்; பொருள்களை வாங்கினான்; வீடு திரும்பினான்.
சீர் – மாறுபாடு இல்லாதது; அளவு; இயல்பான தன்மை ; ஒழுங்கு ; சமம்; நேர்த்தி; அழகு; சீதனம்; செய்யுளின் உறுப்பு.
முக்காற்புள்ளி என்றால் என்ன
முக்காற்புள்ளி ( : )
சிறுதலைப்பு, நூற்பகுதி எண், பெருங்கூட்டுத் தொடர் முதலிய இடங்களில் முக்காற்புள்ளி வருதல் வேண்டும்.
முக்காற்புள்ளி எடுத்துக்காட்டுகள்
சார்பெழுத்து :
பத்துப்பாட்டு 2:246
எட்டுத்தொகை என்பன வருமாறு:
முற்றுப்புள்ளி என்றால் என்ன
முற்றுப்புள்ளி ( . )
முற்றுப்புள்ளி வரும் இடங்களாவன,
- தொடரின் இறுதி
- முகவரி இறுதி
- சொற்குறுக்கம்
- நாள்
முற்றுப்புள்ளி எடுத்துக்காட்டுகள்
உருவுகண்டு எள்ளாமை வேண்டும்.
தலைமையாசிரியர், அரசு மேனிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.
தொல்.சொல்.58.
வினாக்குறி என்றால் என்ன
வினாக்குறி ( ? )
ஒரு வினாத்தொடர், முற்றுத்தொடராகவும் நேர் கூற்றுத் தொடராகவும், இருப்பின், இறுதியில் வினாக்குறி வருதல் வேண்டும்.
வினாக்குறி எடுத்துக்காட்டுகள்
அது என்ன ? (முற்றுத்தொடர் )
நீ வருகிறாயா? என்று கேட்டான். (நேர்கூற்றுத் தொடர்)
வியப்புக்குறி என்றால் என்ன
வியப்புக்குறி (!)
வியப்புக்குறி , வியப்பிடைச் சொல்லுக்குப் பின்பும் நேர் கூற்று வியப்புத்தொடர் இறுதியிலும் அடுக்குச் சொற்களின் பின்னும் வியப்புக்குறி வருதல் வேண்டும்.
வியப்புக்குறி எடுத்துக்காட்டுகள்
எவ்வளவு உயரமானது! (வியப்பிடைச் சொல்லுக்குப் பின்பு)
என்னே தமிழின் பெருமை! என்றார் கவிஞர் (நேர் கூற்று வியப்புத்தொடர் இறுதியில்)
வா! வா! வா! போ! போ! போ! (அடுக்குச் சொற்களின் பின்)
விளிக்குறி என்றால் என்ன
விளிக்குறி ( ! )
அண்மையில் இருப்பாரை அழைப்பதற்கும், தொலைவில் இருப்பாரை அழைப்பதற்கும் விளிக்குறி பயன்படுத்த வேண்டும்.
வியப்புக்குறியும் விளிக்குறியும் ஒரே அடையாளக்குறி உடையன.
எடுத்துக்காட்டுகள்
அவையீர்!
அவைத்தலைவீர்!
மேற்கோள்குறி வகைகள்
மேற்கோள் குறி இரண்டு வகைப்படும். அவை,
ஒற்றை மேற்கோள் குறி ( ‘ ‘ )
இரட்டை மேற்கோள் குறி ( “ “ )
ஒற்றை மேற்கோள் குறி
ஓர் எழுத்தேனும் சொல்லேனும் சொற்றொடரேனும் தன்னையே குறிக்கும் இடம், கட்டுரைப்பெயர், நூற்பெயர் குறிக்கும் இடம், பிறர் கூற்றுப்பகுதிகள் முதலான இடங்களில் ஒற்றைக்குறி வருதல் வேண்டும்.
ஒற்றை மேற்கோள் குறி எடுத்துக்காட்டுகள்
‘ஏ’ என்று ஏளனம் செய்தான். (தன்னை குறிக்கும் இடம்)
பேரறிஞர் அண்ணா ‘செவ்வாழை என்னும் சிறுகதை எழுதினார். (கட்டுரைப் பெயர் குறிப்பிடும் இடம்)
‘கம்பனும் மில்டனும்’ என்னும் நூல் சிறந்த ஒப்பீட்டு நூல் ஆகும். (நூல் பெயர் குறிப்பிடப்படும் இடம்)
‘செவிச்செல்வம் சிறந்த செல்வம்’ என்பர். (கூற்றுப்பகுதிகளை சுட்டுதல்)
இரட்டை மேற்கோள் குறி
நேர்கூற்றுகளிலும் மேற்கோள்களிலும் இரட்டைக்குறி வருதல் வேண்டும்.
எடுத்துக்காட்டுகள்
“நான் படிக்கிறேன்” என்றான்.
“ஒழுக்கமுடைமை குடிமை” என்றார்.
எ.கா. நான் என்ன வேலை செய்ய வேண்டும்
நான் என்ன வேலை செய்ய வேண்டும்?
1. ஆகா என்ன சுகம் தெரியுமா
விடை : ஆகா! என்ன சுகம் தெரியுமா?
2. ஒன்றுமில்லை என்றால் கழுத்தில் எப்படி பட்டை ஏற்பட்டது.
விடை : ஒன்றுமில்லை என்றால், கழுத்தில் எப்படி பட்டை ஏற்பட்டது?
3. என்ன கட்டிப் போடுகிறார்களா
விடை : என்ன, கட்டிப் போடுகிறார்களா!
4. நம் விருப்பம் போல போக முடியாது அது என்ன பிரமாதம்
விடை : நம் விருப்பம் போல் போக முடியாது. அது என்ன பிரமாதம்?
5. நல்ல உணவு உனக்கும் கிடைக்கும் என்று சொன்னது
விடை : “நல்ல உணவு உனக்கு கிடைக்கும்” என்று சொன்னது.
பொருத்தமான நிறுத்தக் குறியிடுக.
என் உடல் ஏழு நிறங்களால் ஆனது ஊதா கருநீலம் நீலம் பச்சை மஞ்சள் இளஞ்சிவப்பு சிவப்பு என்ற வரிசையில் நிறங்கள் அமைந்திருக்கும் எனது பெயரின் முன்பகுதி என் இருப்பிடம் பின்பகுதி என் வடிவம் என் பெயரைக் கண்டுபிடித்துவிட்டாயா
விடை:
என் உடல் ஏழு நிறங்களால் ஆனது. ஊதா, கருநீலம், பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு, சிவப்பு என்ற வரிசையில் நிறங்கள் அமைந்திருந்தாலும், எனது பெயரின் முன் பகுதி என் இருப்பிடம். பின்பகுதி என் வடிவம். என் பெயரைக் கண்டுபிடித்துவிட்டாயா?
பொருத்தமான நிறுத்தற் குறியிடுக.
சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர் இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.
விடை:
சேரர்களின் பட்ட பெயர்களில் “கொல்லி வெற்பன்'', "மலையமான்" போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும், பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.