FORCED DEBT COLLECTION NEW BILL TAMILNADU / வலுக்கட்டாய கடன் வசூலை தடுக்க தமிழ்நாட்டில் புதிய சட்ட மசோதா

TNPSC PAYILAGAM
By -
0

FORCED DEBT COLLECTION NEW BILL TAMILNADU


  • கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வகைசெய்யும் மசோதாவை சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த மசோதா வரும் 29-ம் தேதி நிறைவேற்றப்பட உள்ளது.
  • தமிழ்நாடு அடகு கடைக்காரர்கள் சட்டம்-1943, தமிழ்நாடு பணக் கடன் வழங்குவோர் சட்டம்-1957, தமிழ்நாடு கந்துவட்டி தடை சட்டம்-2003 ஆகியவற்றை அரசு இயற்றியுள்ளது.
  • கடன்களை வசூலிக்க சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை விதிக்க வகைசெய்யும் மசோதாவை சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 26.04.2025 தாக்கல் செய்தார். 


மசோதாவின் முக்கிய அம்சங்கள்:

  • தனிநபர், சுயஉதவி குழுக்கள், கூட்டு பொறுப்பு குழுக்கள் ஆகியோருக்கு பணக் கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் வலுக்கட்டாய வசூலிப்பு முறையால் ஏற்படும் இன்னல்களில் இருந்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய, நலிந்த பிரிவினரை பாதுகாக்க சட்டம் இயற்றுவது அவசியமாகிறது. அதற்கான சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது.
  • வங்கிகள், ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் தவிர, தமிழகத்தில் உள்ள பணக் கடன் வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்
  • கடன் வழங்கிய நிறுவனமோ, அதன் முகவரோ, கடன் வாங்கியவர் மற்றும் அவரது குடும்பத்தினரை வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்த கூடாது. அந்த வகையில், அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது, வன்முறையை பயன்படுத்துவது, அவமதிப்பது, மிரட்டுவது, அவர்கள் செல்லும் இடங்களில் பின்தொடர்வது, அவர்களுக்கு சொந்தமான அல்லது பயன்படுத்தும் சொத்துகளில் தலையிடுவது, அதை பயன்படுத்த முடியாமல் இடையூறு செய்வது, அந்த சொத்துகளை பறித்துக் கொள்வது ஆகிய செயல்களில் ஈடுபட கூடாது.
  • அதேபோல, கடன் வாங்கியவரின் வீடு, வசிப்பிடம், வேலை அல்லது தொழில் செய்யும் இடம் ஆகியவற்றுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்த அல்லது கடனை வசூலிக்க, தேவையற்ற செல்வாக்கை பயன்படுத்தி வலுக்கட்டாயப்படுத்துவது, தனியார் அல்லது வெளி தரப்பு முகமைகளின் சேவைகளை பயன்படுத்துவது, அரசு திட்டத்தின்கீழ் உரிமை அளிக்கும் ஆவணங்கள், பிற முக்கிய ஆவணங்கள், பொருட்கள், வீட்டு உடமைகளை வலுக்கட்டாயமாக எடுக்க கோருவது போன்றவை இச்சட்டத்தின் 20-வது பிரிவின்படி வலுக்கட்டாய நடவடிக்கைகளாக கருதப்படும்.
  • அதன்படி, 20-வது பிரிவில் கூறப்பட்டுள்ள குற்றங்களை செய்தால், 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்
  • வலுக்கட்டாய நடவடிக்கைகளுக்கு வெளி முகமைகளை பயன்படுத்துவது, ஆவணங்களை எடுப்பது போன்ற குற்றங்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். 
  • கடன் பெற்றவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் யாராவது தற்கொலை செய்து, அதற்கு கடன் வழங்கிய நிறுவனம் அல்லது முகவரின் வலுக்கட்டாய நடவடிக்கை காரணமாக இருந்தால், அது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 108-வது பிரிவின்கீழ் குற்றமாக கருதப்படும். 
  • மேலும், கடன் வழங்கும் நிறுவனம் பதிவு சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால், 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். 

நன்றி : இந்து தமிழ்திசை நாளிதழ்


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)